×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: விசாரணை ஆணைய செயலாளர் தகவல்

சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்திடம் பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வருகிற 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
விசாரணை ஆணையங்கள் சட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம், தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி நிகழ்ந்த காவல் துறை துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை தொடர்பான சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த ஆய்வு வரம்பானது கடந்த மே மாதம் 22ம் தேதிக்கு பிறகு தூத்துக்குடியிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடந்த சம்பவங்களையும் சேர்த்து விசாரணை செய்வதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு விரிவு படுத்தப் பட்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் 22ம் தேதி நிகழ்ந்த சம்பவம் மற்றும் அதற்கு பின்னிட்ட நாட்களில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிந்த கருத்துக்கள் மற்றும் விவரங்களை தகுதி வாய்ந்த நபர்களின் வாக்குமூலமாகவோ அல்லது மனுக்கள் மூலமாகவோ ஆணையத்திற்கு வருகிற 27ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம். சத்தியபிரமாண உறுதிமொழி பத்திரங்கள் (1+2 நகல்கள்) அரசு மாளிகை எண். என்.சி.பி.28,  பி.எஸ்.குமாராசாமி ராஜா சாலை(கிரீன்வேஸ் சாலை) சென்னை-28 என்ற விலாசத்திற்கோ அல்லது அரசு பழைய சுற்றுலா மாளிகை, தெற்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி-628 001 என்ற முகவரிக்கோ, நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இருவேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி: 3 பேர் படுகாயம்