×

தெருவிளக்கு இல்லாததால் இருளில் மூழ்கும் சடையங்குப்பம் மேம்பாலம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சடையங்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் தெருவிளக்கு இல்லாததால், இரவில் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. மணலி மண்டலம், 16வது வார்டில் பர்மா நகர், சடையங்குப்பம், எலந்தனூர் போன்ற பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவசர தேவைக்காக திருவொற்றியூர் செல்ல சடையங்குப்பம் அருகே உள்ள புழல் ஏரி உபரி நீர் கால்வாய் மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த கால்வாய் மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் பணிகள் முடிந்து இரவு நேரங்களில் வாகனங்களிலும், நடந்தும் இந்த மேம்பாலத்தை கடந்து வருபவர்கள் அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பைக்கில் வருபவர்கள் எதிரில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் ஒன்றோடு ஒன்று மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இவ்வாறு விபத்து ஏற்படும்போது தவறி கீழே கால்வாயில் விழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கால்வாய் மேம்பாலத்தின் மீது தெருவிளக்கை அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு பிரிவு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் இரவு நேரங்களில் அச்சத்துடனே பொதுமக்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘திருவொற்றியூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மேம்பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலத்தின் மீதுதெருவிளக்கு இல்லாததால் இருளில் சமூக விரோதிகள் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுகிறது.

இங்கு தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல தெருவிளக்கு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனாலும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த மேம்பாலத்தின் மீது தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

The post தெருவிளக்கு இல்லாததால் இருளில் மூழ்கும் சடையங்குப்பம் மேம்பாலம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Satiankuppam ,Sadayanguppam ,Manali Mandal ,16th Ward ,Barma Nagar ,Elantanoor ,
× RELATED மணலி மண்டலத்திற்கு உட்பட்ட 16வது...