வல்லம்,செப்.12: வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள்தொகை தினம் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் மரக்கன்று நடும் விழா நடந்தது. பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற 11ம்வகுப்பு மாணவி ஷாலினி நிபியா, 2ம் பரிசு பெற்ற சோபியா, 3ம் பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவி தீபிகா ஆகியோருக்கு வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் அகிலன் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்த சாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், வட்டார விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட சமூக நலத்துறை மூத்த ஆலோசகர் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வல்லம் பொறுப்பு மருத்துவ அலுவலர் சுகப்பிரியா ஆர்யா, பல் மருத்துவர் அபிராமி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி, பகுதி நேர சுகாதார செவிலியர் ரேணுகா, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் விஸ்வநாதன், நம்பிக்கை மைய ஆலோசகர் ரேவதி, கிராம சுகாதார செவிலியர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் அகேஸ்வரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் சுமதி நன்றி கூறினார்.
The post வல்லம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.