- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமநாதபுரம்
- கலெக்டர்
- விஷ்ணுசந்திரன்
- பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை
ராமநாதபுரம், மார்ச் 4: ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 782 குழந்தைகள் பயன்பெற்றதாக கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார். பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் மூலம் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதியில் 111 மையங்களும், ஊரகப் பகுதியில் 1150 மையங்களும் என மொத்தம் 1,261 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5,345 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
குறிப்பாக சத்துணவு மையங்கள், பள்ளிகள், துணை சுகாதார மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், பிற மாநிலங்கள்- மாவட்டங்களிலிருந்து வந்து பணி நிமிர்த்தமாக தங்கி இருக்கும் மக்கள் வசிப்பிடங்கள் போன்றவற்றில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதன் நோக்கம் குழந்தைகளுக்கு பரவும் போலியோ நோய் கிருமிகளை தடுத்து போலியோ நோயே அறவே ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சொட்டு மருந்து பெற்று கொள்ளாத குழந்தைகளுக்கு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகளுக்கே வந்து சொட்டு மருந்து வழங்க உள்ளார்கள். பெற்றோர்கள் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
The post ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.13 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கல் appeared first on Dinakaran.