தர்மபுரி, செப்.12: தர்மபுரியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 407 மனுக்கள் குவிந்தன. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல் உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 407 மனுக்கள் அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 407 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.