×

மகளின் காதல் திருமணத்தால் குடும்பத்தில் தகராறு: மனைவி, மகள்களைக் கொன்று டீக்கடை உரிமையாளர் தற்கொலை

நாகை: நாகையில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் 3 மகள்கள் உடன் அதே பகுதியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மூத்த மகள் தனலட்சுமி என்பவருக்கும், அண்மை ஊரான கீழத்தூர் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற விமல்ராஜ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தனலெட்சுமியின் திருமணத்தை லட்சுமணன் கடுமையாக எதிர்த்துள்ளார். அதனால் கடந்த 7 மாதங்களாக லட்சுமணன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். தனலெட்சுமி அவரது கணவருடன் அருகாமையில் உள்ள சொந்த கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் லட்சுமணன் கடந்த 4 தினங்களாக அவரது டீ கடையை திறக்காமல் இருந்துள்ளார். அதேபோல் இன்றும் வழக்கமாக கடையை திறக்காமல் இருந்ததால், அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், லட்சுமணனின் வீட்டுக்கதவை உடைத்தனர். அப்போது வீட்டின் உள்ளே லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் லட்சுமணன், அவரது 2 மகள்களான, வினோதினி, அக்சயாவின் தலையில் குழவிக்கல்லை போட்டும், அவரது மனைவி புவனேஸ்வரியின் கழுத்தில்  குழவிக்கல்லை போட்டும் கொலை செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.  இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், அங்கு நேரடி விசாரணையை மேற்கொண்டார். வீட்டிலிருந்த 4 சடலங்களை கைப்பற்றிய போலீசார், நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாகை மாவட்டத்தில் மகளின் காதல் திருமணத்தால் தன் மனைவி, மகள்களை கொன்று லட்சுமணனும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.               …

The post மகளின் காதல் திருமணத்தால் குடும்பத்தில் தகராறு: மனைவி, மகள்களைக் கொன்று டீக்கடை உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nagai ,
× RELATED நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்