பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிமென்ட் தளம் அமைக்காததால் நோயாளிகள் அவதி

 

ஊத்துக்கோட்டை, ஜன. 26: பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மழையால் சேறும் சகதியுமான வளாகத்தில் ஜல்லி கற்கள் கொட்டி இதுவரை சிமென்ட் தளம் அமைக்காதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர் பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெரியபாளையம், தண்டுமாநகர், ஆத்துப்பாக்கம், தண்டலம், வடமதுரை, தும்பாக்கம், காக்கவாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவம், பிரசவம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் பெற்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவ்வப்போது அடிக்கடி மழை பெய்ததால், இந்த மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி, மருத்துவமனை வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டது. எனவே மருத்துவமனை வளாகத்தை சுற்றி சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் அல்லது சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் பிறகு மருத்துவமனையை சுற்றி ஜல்லி கற்கள் கொட்டி சமன் செய்தனர். ஆனால் ஜல்லி கற்கள் கொட்டி 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை சிமெண்ட் தளமோ அல்லது சாலையோ அமைக்கவில்லை. இதனால் நோயாளிகள், முதியவர்களின் கால்களை ஜல்லி கற்கள் பதம் பார்க்கிறது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் விரைவில் சிமென்ட் தளமோ அல்லது சாலையோ அமைக்க வேண்டும் என நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிமென்ட் தளம் அமைக்காததால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: