நெய்வேலி அருகே பிரபல ரவுடி அதிரடி கைது

நெய்வேலி, அக். 18: நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி ரோஜா நகர் அம்பேத்கர் நகரில் வசித்து வரும் மணிகண்டன் மகன் குருமூர்த்தி இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே மாதம் 2ம் தேதி இந்திரா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை எதிரில் நடந்து சென்றபோது, கீழ் வடக்குத்து பகுதியை சேர்ந்த கோபி மற்றும் அவரது நண்பர்கள் குருமூர்த்தியை மறித்து, எனது எதிரி வீரமணிக்கு நீ தான் உதவி செய்கிறாயா என்று கேட்டு குருமூர்த்தியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு இனிமேல் வீரமணிக்கு உதவி செய்தால் உன்னை வெட்டி கொன்று விடுவேன் என கோபி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக குருமூர்த்தி, நெய்வேலி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை தேடி வந்தனர்.

மேலும் கோபி மீது சுமார் 7 பிடி வாரண்டுகள் நிலுவையில் இருந்த நிலையில் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் நெய்வேலி டிஎஸ்பி ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் உதவி ஆய்வாளர் அழகிரி மற்றும் போலீசார் தலைமையில், கோபியை தேடி வந்த நிலையில், வடக்குத்து மீன் கடை அருகே கோபி பொதுமக்களை மிரட்டிய தகவலையறிந்து, வடக்குத்து மீன் கடை அருகே போலீசார் பிடிக்க சென்ற போது, போலீசாரை தள்ளிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் அதிவேகமாக கீழ் வடக்குத்து சாலையில் கீழூர் நோக்கி சென்றார். அப்போது சாலையின் வேகத்தடையில் நிலை தடுமாறி சாலை ஓர பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது போலீசார் சென்று கோபியை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். கோபி மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்கு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நெய்வேலி அருகே பிரபல ரவுடி அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: