நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்காததால், தபால் வாக்கு படிவம் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாவு புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கும் நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. குறிப்பாக ராதாபுரம் தொகுதியில் 2 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு ஆணை வழங்காமல் வாட்ஸ் அப்பில் மட்டும் தகவல் அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். அதாவது, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து அவர்களது பணி ஆணையையும் இணைத்து தபால் வாக்கு பெற (படிவம் 12) விண்ணப்பிக்க வேண்டும்.
