மாநகர பஸ் மோதி இறந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு 21 லட்சம் இழப்பீடு: எம்டிசிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகர பேருந்து மோதி உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு 21 லட்சம் இழப்பீடு வழங்க எம்டிசி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்மலை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி அற்புதமணி. இவர்களது மகள் சில்வியா (23) கல்லூரி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இருசக்கர வாகனத்தில் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே சென்றபோது, அந்த வழியே வேகமாக வந்த மாநகர பேருந்து சில்வியா மீது மோதியது. அதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தநிலையில், தங்களது மகளின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து கழகத்திடம் இருந்து 40 லட்சம் இழப்பீடு கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை வாகன விபத்துகளுக்கான தீர்ப்பாயத்தில் நீதிபதி வெங்கட்டவரதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘விபத்துக்கு மாநகர பேருந்து டிரைவரின் கவனகுறைவு, அஜாக்கிரதையே காரணம் என்று தெரிய வருகிறத. மேலும் சில்வியா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்ததும், அவரது வயது 23 என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது. எனவே உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 21 லட்சத்து 90 ஆயிரத்து 600 விபத்து நடந்த அன்றிலிருந்து 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும்,’’ என்று உத்தரவிட்டார்.   

Related Stories: