×

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.29 கோடிக்கு பரிவர்த்தனை

தஞ்சாவூர், ஆக.24: தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.29 கோடிக்கு விளை பொருட்கள் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தஞ்சாவூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் பூதலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டங்கள்) ஈஸ்வர் தலைமையில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதிதங்கம், துணை இயக்குனர்கள் (உழவர் பயிற்சி நிலையம்) பால சரஸ்வதி, வித்யா (வேளாண் வணிகம்) விற்பனைக்குழு செயலாளர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்னணு வேளாண் சந்தை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் அடிப்படை தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வணிகர்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை இடை தரகர்களின்றி நாடு முழுவதும் உள்ள வணிகர்களிடம் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் 7500 விவசாயிகளின் தரவுகள் வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 143 வணிகர்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4,500 டன் அளவிலான விளைபொருட்கள் ரூ.29 கோடி மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு லாபகரமான விலையினை பெற்றிட ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன் பெறலாம் என்று தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு கேட்டுக்கொண்டுள்ளார்.

The post தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.29 கோடிக்கு பரிவர்த்தனை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் இடத்தை...