தென்மேற்கு பருவ மழை துவங்குவதில் தாமதம்

 

ஊட்டி, ஜூன் 14: நீலகிரியில் பருவ மழை துவங்காமல் உள்ளதால், தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் இறுதி வாரத்தில் பருவமழை துவங்கி ஜூலை மாதம் இறுதி வரை பெய்யும். சில சமயங்களில் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து 4 மாதங்கள் நீலகிரியில் கொட்டித் தீர்த்தது. இதனால், அனைத்து நீர் ஆதாரங்களிலும் நீர் மட்டம் உயர்ந்தது. பல அணைகள் நிரம்பி வழிந்தன. அக்டோபர் மாதத்திற்கு பின்னரே மழை குறைந்தது.

வடகிழக்கு பருவமழையும் குறித்த சமயத்தில் அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை பெய்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவதில்லை. இந்நிலையில், இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரம் முதல் அவ்வப்போது நீலகிரியில் மழை பெய்து வருகிறது. எனினும், இந்த மழை வெகு நேரம் தொடருவதில்லை. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே பெய்கிறது. ஜூன் மாதம் துவங்கியும் தென்மேற்கு பருவமழை துவங்காமல் உள்ளது.

நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்படாமல் வழக்கம் போல் வெயில் வாட்டி வருகிறது. சில இடங்களில் சிவப்பு சிலந்தி நோயால் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை துவங்கினாலேயே இந்த நோய் தாக்கப்பட்ட செடிகள் துளிர்க்கும். மேலும், மலை காய்கறிகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். எனவே, பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.

The post தென்மேற்கு பருவ மழை துவங்குவதில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: