திருவள்ளூர் பூங்காவனத்தம்மன் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் திரும்ப பெறப்படும்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உத்தரவாதம்

திருவள்ளூர், பிப். 16: திருவள்ளூர் பூங்காவனத்தம்மன் கோயில் நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. திருவள்ளுர் மாவட்டம், புட்லூரில் உள்ள பூங்காவனதம்மன் கோயிலுக்குச் சொந்தமாக 2.95 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், வணிக வளாகம் கட்ட கோயிலின் தக்கார் டெண்டர் கோரியுள்ளார். இந்த டெண்டரை ரத்து செய்யுமாறு உத்தரவிடக்கோரி திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பக்தர்களின் ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமலும், சட்ட விதிகளை பின்பற்றாமலும் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்பதை மீறி, வணிக வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், இந்த டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என்று உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post திருவள்ளூர் பூங்காவனத்தம்மன் கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் திரும்ப பெறப்படும்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உத்தரவாதம் appeared first on Dinakaran.

Related Stories: