சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள திமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் களப்பணிகளை திமுகவினர் தொடங்கியுள்ளனர். திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் காணொளி மூலம் பங்கேற்று பேசி வருகிறார். அதை தொடர்ந்து, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்து பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
