காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி வந்தவாசி அருகே பரபரப்பு பறிமுதல் செய்த மொபட்டை திரும்ப தரக்கோரி

வந்தவாசி, அக்.26: வந்தவாசி அருகே பறிமுதல் செய்த மொபட்டை திரும்ப தரக்கோரி காவல் நிலையம் முன் போதை ஆசாமி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள எஸ்.காட்டேரி போலீஸ் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மொபட்டில் சென்றவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, ஆத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜராஜன்(45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போதையில் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்படும் என எச்சரிக்கை செய்த போலீசார் மொபட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். நாளை அபராதம் செலுத்திய பிறகு மொபட்டை திரும்ப ஒப்படைப்பதாக அவரிடம் கூறினர். ஆனால், அதை ஏற்காத ராஜராஜன் மொபட்டை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன் என கூறி காவல் நிலையம் முன் நின்று கொண்டு இருந்தாராம். பின்னர், திடீரென அங்கிருந்து நடந்து சென்ற அவர், அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கொண்டு மீண்டும் காவல் நிலையம் வந்தார். பின்னர், காவல் நிலையம் முன் திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயற்சித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே அவரை தடுத்து நிறுத்தி உடல் மீது தண்ணீர் ஊற்றினர். ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக மற்றொரு வழக்கு பதிவு செய்து ராஜராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் முன் போதை ஆசாமி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி வந்தவாசி அருகே பரபரப்பு பறிமுதல் செய்த மொபட்டை திரும்ப தரக்கோரி appeared first on Dinakaran.

Related Stories: