ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரை சிறை பிடித்தனர். மேலும் 2 படகுகளையும் சிறைப்பிடித்து சென்றனர்.
கச்சத்தீவுக்கு அருகே செல்ல விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியதாக மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். விரட்டியடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்வரத்து இன்றி கரை திரும்பினர். படகுகளின் எண்களை இலங்கை கடற்படையினர் பதிவு செய்ததாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறை பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை, காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியது. தமிழக மீனவர்கள் 7 பேர் 3 மணி நேரம் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர். 2 படகுகளும் பழுதானதால் கடல் நீரோட்டத்தால் இலங்கைக்கு வந்ததால் 7 பேரும் விடுவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரின் நிலை என்னவானது என்ற தகவல் வெளியாகவில்லை.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!