மதுரை, பிப். 25: இந்தியை திணிக்க முயல்வது, கல்விக்கான நிதியை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்தை வடக்கு மாவட்ட விசிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சுடர்மொழி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பூபாலன் உள்பட 40க்கும் மேற்பட்டோர் தபால் நிலையத்தை முற்றிகையிட்டனர். இதனால் ஊழியர்கள் தபால் அலுவலகத்தை பூட்டினர்.
ஆனால் விசிகவினர் தபால் நிலையத்திற்குள் நுழைவோம் என்று முன்னேறிச்சென்றனர். இதனால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழையும் நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் எந்த வழியில் வந்தாலும் இந்தியை எதிர்ப்போம், கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு தராத ஒன்றிய அரசை கண்டிக்கிறோம் என போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து விசிக முற்றுகை appeared first on Dinakaran.