கோவை, ஆக. 1: கோவை அருகே ஐஸ்கிரீம் கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஹரிஹர பாண்டியன் (38). இவர் கோவைப்புதூரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ம் தேதி வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடை திறக்க வந்தார். அப்போது ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.1,400-ஐ காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஹரிஹர பாண்டியன் குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பணத்தை திருடி சென்றது குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த ஷிகாபுதீன் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ரூ.1000 பறிமுதல் செய்தனர்.
The post ஐஸ்கிரீம் கடையில் பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.