×

சேலம் அருகே குடும்ப தகராறில் பயங்கரம்: கிணற்றில் தள்ளி 2 குழந்தைகள் கொலை: சைக்கோ தந்தைக்கு தர்மஅடி

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த வீரகனூர் புளியங்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (34). இவரது மனைவி அமுதா (30). இவர்களது மகன் சந்தோஷ் (12), புளியங்குறிச்சி அரசு பள்ளியில் 6ம் வகுப்பும், மகள் காவியா (7) தனியார் பள்ளியில் 1ம் வகுப்பும் படித்து வந்தனர். சரவணன், அமுதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை, தம்பதியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், குழந்தைகள் சந்தோஷ், காவியா ஆகிய இருவரையும், அருகில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள கிணற்றுமேட்டில் புற்களை பறிக்கும்படி குழந்தைகளிடம் கூறினார். தந்தை கூறியபடி, குழந்தைகள் இருவரும் அமர்ந்து புற்களை பறித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென இருவரையும் அங்கிருந்த கிணற்றில் சரவணன் தள்ளிவிட்டார். 45 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தற்போது 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. குழந்தைகள் இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அமுதா, ஓடிவந்து தானும் கிணற்றில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் சரவணன், அவரை இறுக்கமாக பிடித்து கொண்டு, குழந்தைகளை காப்பாற்ற விடாமல் தடுத்தார். இதனால் குழந்தைகளை காப்பாற்றும்படி, அமுதா கூச்சலிட்டு கதறி அழுதார். இதனிடையே, சிறுவன் சந்தோஷ், கிணற்றில் இருந்த மின்மோட்டார் பைப்பை பிடித்து மேலே ஏறி வர முயன்றான்.

அதை கண்டு ஆத்திரமடைந்த சரவணன், மூர்க்கத்துடன் அருகில் இருந்த கல்லை எடுத்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன் சந்தோஷின் தலையில் போட்டுள்ளார். இதனால், மண்டை உடைந்த சிறுவன், மீண்டும் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினான். அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், கிணற்றில் குதித்து குழந்தைகள் இருவரையும் மீட்டனர். ஆனால், அதற்குள் சந்தோஷ், காவியா இருவரும் பரிதாபமாக இறந்து விட்டனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், சைக்கோ போல செயல்பட்டு அப்பாவி குழந்தைகளை கொலை செய்த சரவணனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை