ஈரோட்டில் வீடு இடிந்து பலியான தாய்-மகனுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி முதல்வருக்கு மனு

 

ஈரோடு, செப். 4: ஈரோட்டில் மழையால் வீட்டின் மேல்தள சுவர் இடிந்து விழுந்து பலியான தாய்-மகன் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூபைர் அகமது, துணை தலைவர் ஜவஹர் அலி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் வசிப்பவர் ஜாகீர்உசேன் (45). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி இரவு ஜாகீர்உசேன் இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி சாரம்மா (38), 8ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது அஸ்தாக் (12) ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக தொடர் மழையால், ஜாகீர் உசேனின் வீட்டின் மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாரம்மா, முகமது அஸ்தாக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

The post ஈரோட்டில் வீடு இடிந்து பலியான தாய்-மகனுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி முதல்வருக்கு மனு appeared first on Dinakaran.

Related Stories: