அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள்

 

ஊட்டி, ஆக.1: அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் வழங்கினார். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

சுமார் 128 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயிலும் 55 மாணவிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கும் விதமாக முதல் கட்டமாக 5 பேருக்கு காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஷோபனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு குழந்தைகள் காப்பக மாணவிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: