கொச்சி: மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். அவரிடம், ’தொடர்ந்து நடிப்பது உங்களுக்கு சோர்வாக இல்லையா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: தினமும் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு இடங்கள் என்று பணியாற்றி வருகிறேன். படப்பிடிப்பு என்பது ஒரே கம்ப்யூட்டர், ஒரே மேஜை, ஒரே ஃபைல் அல்ல.
அலுவலக வேலை என்றால், மாதக்கணக்கில் ஃபைல் அப்படியே இருக்கும். திரைத்துறை படப்பிடிப்பு அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நாள்தோறும் புது விஷயங்களில் ஈடுபடுவோம். நடிப்பும் வித்தியாசப்படும். நேற்று ஒருமாதிரி, இன்று வேறுமாதிரி மாறும். ஆனால், ஒவ்வொரு ஷாட்டிலும் நடிப்பதற்கு முன்பு ஒருவித டென்ஷன் ஏற்படும். ரத்தம் கொதிக்கும்.
நடிக்க தொடங்கும் நேரத்தில், முதலில் அந்த டென்ஷனை மறைக்க வேண்டும். அதற்கு பிறகே அந்த கதாபாத்திரமாக மாற முடியும். ரத்தம் கொதித்ததற்கும், கதாபாத்திரமாக மாறியதற்கும் இடைப்பட்ட காலத்தில் சிறந்த நடிப்பு உருவாகும். கேமரா முன்பு லைட்டுகளும், ஏராளமான ஆட்களும் இருப்பார்கள். ஒருவர் தவறு செய்தாலும் கூட குழப்பம் ஏற்படும் என்பதை எல்லாம் மறந்து நடிக்க வேண்டும். அதனால், சோர்வு என்பதே எனக்கு ஏற்படாது.
