மும்பை: கடந்த 2009ல் ‘ஃபிட்டிங் மாஸ்டர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர், மடால்ஷா சர்மா (34). தொடர்ந்து கன்னடம், பஞ்சாபி, ஜெர்மன், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்தார். தமிழில் ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பத்தயிரம் கோடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிறகு பாலிவுட் சீனியர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகனும், நடிகருமான மகாஅக்ஷய் சக்ரவர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்த மடால்ஷா சர்மா, தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி: மிகவும் பிரபலமான இயக்குனர் ஒருவர் என்னை தனியாக சந்திக்க அழைத்தார். அப்போது எனக்கு 19 வயது. தனது படத்துக்கு பிகினி உடையில் சவுகரியமாக உணரக்கூடிய ஒரு பெண்ணை தேடுவதாக அவர் சொன்னார். இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்று நினைத்து, சரி என்றேன். பிறகு கதைக்கு அந்த காட்சி நியாயமானதாகவும், தேவையானதாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
உடனே அந்த இயக்குனர், ‘நீங்கள் கேமரா முன்பு பிகினி உடையில் சவுகரியமாக உணர்கிறீர்களா என்பதை நான் பார்க்க வேண்டும். அந்த உடையில் உங்கள் உடல்மொழியை பார்க்க வேண்டும்’ என்று வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த நான், ‘நான் ஒரு நடிகை. கதைக்கு தேவை என்றால் பிகினி உடையோ, புடவையோ அணிந்து நடிக்க தயார். அதை கேமரா முன்பு மட்டுமே செய்வேன். உங்கள் முன்னால் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறமையை நம்பி நடிக்க வைத்தால் நடிப்பேன்’ என்றேன். இந்த பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.
