திருச்சி,ஜூலை 15: திருவண்ணாமலை மாவட்டம் கொளக்குடி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (23). கார் டிரைவர். இவர் ஜூலை 12ம் தேதி பயணி ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வந்தார். பின்னர் இரவு பயணியை இறக்கி விட்ட பின்பு, ஏர்போர்ட் திருவளர்ச்சிபட்டி பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்தி காருக்குள் உறங்கினார். ஜூலை 13ம் தேதி அவ்வழியாக டூவீலரில் வந்த 2 நபர்கள் காரின் பின்பக்கம் மோதினர். இதுகுறித்து ராஜேஷ் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது.
உடனே 2 நபர்களும் சென்று தங்களது நண்பர்களை அழைத்து வந்து, கார் டிரைவரை தாக்கினர். மேலும் கார் மற்றும் அவரிடமிருந்த ரூ.3000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து புதுக்கோட்டை மாவட்டம் நீர்பழனி ஆவுடையார்பட்டி பகுதியை சேர்ந்த மதன்குமார் (22) மற்றும் லால்குடி நண்பர்கள் நகரைச் சேர்ந்த ரித்தீஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த கார், மற்றும் ரூ.3000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
