திருச்சி, ஜூலை 15: திருச்சியில் வீடு புகுந்து நகைகளை திருடிய முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி பீமநகர் மான்சிங் பேட்டை போலீஸ் குடியிறுப்பில் வசித்து வருபவர் செல்வக்குமார் (55). இவரது மனைவி மாலதி (51). செல்வக்குமார் தற்போது ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-ஆக பணியாற்றி வருகிறார்.
இவர் மனைவி மாலதி, கடந்த 2.7.2020 அன்று தன் வீட்டு பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன் போட்டாவுக்கு பின்னால், 40 கிராம் எடையுள்ள மாகாலெட்சுமி டாலர் உருவம் பொறித்த டாலர் செயின் மற்றும் 8 கிராம் எடை கொண்ட தொங்கல் தோடு ஆகியவற்றை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் வாசல் கதவை சாத்திவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக சென்றிருந்த நேரத்தில், வீட்டுக்குள் புகுந்த சீர்காழியை சேர்ந்த ராஜேந்திரன் (65) வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றார்.
இதுகுறித்து செல்வக்குமார் கொடுத்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-5ல் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து மாஜிஸ்திரேட் டார்வின் முத்து உத்தரவிட்டார்.
