ராயக்கோட்டை, ஜூலை 15: ராயக்கோட்டை பகுதியில், பட்டன்ரோஸ் விளைச்சல் அதிகரித்த நிலையில், விற்பனைக்கு அனுப்ப விவசாயிகள் பூக்கள் பறிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி சாகுபடிக்கு அடுத்து பூக்கள் சாகுபடி பிரதானம். இதில் சாமந்தி, காக்காடா, செண்டு மல்லி, அரளி மற்றும் பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் மற்றும் வெள்ளை சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையில் விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்த வரை ஓசூர் மற்றும் ராயக்கோட்டை மண் வளம் எப்போதும் ஈரப்பதம் நிறைந்து காணப்படும். இதனால், மற்ற மாவட்டங்களை காட்டிலும், ராயக்கோட்டையில் பூக்கள் விளைச்சல் ஒவ்வொரு முறையும் அதிகரித்து காணப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன் பன்னீர் ரோஜா பூக்கள் அறுவடை செய்தனர். தற்போது, சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பட்டன்ரோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பூக்கள் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் நேற்று காலை முதலே விவசாயிகள், பூக்களை பறிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். பறிக்கும் பூக்களை ராயக்கோட்டை மற்றும் ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு பூக்கள் தரம் வாரியாக பிரித்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். வழக்கமாக ராயக்கோட்டையில் தக்காளிக்கு எப்போதுமே மவுசு.
ஆனால், தற்போது பூக்கள் சாகுபடி தான் அதிகரித்து காணப்படுகிறது. இதனாலேயே, விவசாயிகள் பூக்களை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர். நாளை மறு நாள் ஆடி மாதம் பிறக்க உள்ளது. இதற்காக பூக்களின் தேவை அதிகரித்து காணப்படும். மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
