புதுடெல்லி: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பெருமளவு கருப்பு பணத்தை பதுக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குறித்த தரவுகளை சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் 8 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து 3.25 சுவிஸ் பிராங்காக (ரூ.36,793 கோடி) சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், தனிநபர் மற்றும் கிளை நிறுவன வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள பணம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது. அறக்கட்டளைகள் மூலம் ரூ.218 கோடியும், பத்திரங்கள் உள்ளிட்ட நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,241 கோடியும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் இருப்பு உள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.37,600 கோடியாக 3 மடங்கு அதிகரித்தது. அதன் காரணமாகவே 2025ல் முதலீடு பணம் சரிந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 2006ல் சுவிஸ் வங்கிகளில் ரூ.68,912 கோடியாக இருந்தது.
சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணத்தை பொறுத்த வரை இங்கிலாந்து (ரூ.22.5 லட்சம் கோடி) முதலிடத்திலும், அமெரிக்கா (ரூ.8.8 லட்சம் கோடி) 2வது இடத்திலும், பிரான்ஸ் (ரூ.7.4 லட்சம் கோடி) 3வது இடத்திலும் உள்ளன. இந்தியா 48ல் இருந்து 46வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
