×

மாநில நெடுஞ்சாலை துறையில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்: வாய்மொழி உத்தரவால் அதிர்ச்சி

 

அவிநாசி: மாநில நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள வாய்மொழி உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகள் துறை கட்டுப்பாட்டில் சுமார் 73,150 கி.மீ அதிகமான சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் 40 கோட்டங்கள் உள்ளன. இதே போல் தரக்கட்டுப்பாடு, திட்டங்கள், அலகு என தனித்தனியாக கோட்டங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் தட்டச்சு, தொழில்நுட்ப உதவியாளர்,அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தற்காலிகமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 மாதங்களாக நெடுஞ்சாலைதுறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாததால் அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். திருப்பூர் மற்றும் தாராபுரம் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்டங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிதி வராததால் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. எனவே, தற்காலிக பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் வட்டத்தில் உள்ள கரூர் கோட்டம், ஈரோடு கோட்டம், கோவை வட்டத்தில் கோவை, பொள்ளாச்சி கோட்டம் அலுவலகங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தற்காலிக ஊழியர்கள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் என 5 முதல் 15 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறோம்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு எங்களை பணியிலிருந்து நீக்கி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம், எதிர்காலம், எங்களின் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 15 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறோம். புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு எங்களை பணியிலிருந்து நீக்கி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

Tags : State Highways Department ,Avinashi ,Tamil Nadu ,State Highways Department.… ,
× RELATED தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் விவசாயிகள் மறியல்