ஓசூர், மே 28: ஓசூர் அருகே கர்நாடகா மாநிலத்திலிருந்து டூவீலரில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி போலீசார், கொத்தஜீகூர் பிரிவு ரோடு அருகே நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத டூவீலரில் 3 பேர் வந்தனர். காவலர் சக்திவேல் அவர்களது டூவீலரை தடுத்து நிறுத்தினார்.
அப்போது, டூவீலரிலிருந்து இறங்கி இருவர் தப்பி ஓடி விட்டனர். டூவீலர் ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தில், அவர் தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசா(24) என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் கர்நாடகாவிலிருந்து 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சீனிவாசாவை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
