புதுடெல்லி: ‘தங்கல்’ நிதேஷ் திவாரி இரு பாகங்களாக இயக்கியுள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘ராமாயணா’. வரும் 24ம் தேதி டிரைலர் வெளியாகிறது. முன்னதாக முதல் பாகத்தின் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இது ‘பிரதம் சங்கல்ப்’ என்ற பெயரில் நடந்தது. அப்போது டிரைலர் திரையிடப்பட்டது. அருண் கோவில் (மன்னர் தசரதர்), ஷோபனா (கைகேயி), அஜிங்க்யா தேவ் (விஸ்வாமித்திரர்), குணால் கபூர் (இந்திர தேவன்), ரகுல் பிரீத் சிங் (சூர்ப்பனகை), ரவி துபே (லட்சுமணன்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமனாக சன்னி தியோல் நடித்துள்ளனர். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிதேஷ் திவாரி பேசும்போது, ‘ராமாயணத்தை நான் நேர்மையுடனும், மரியாதையுடனும், உண்மை தன்மையுடனும் திரையில் கொண்டு வந்துள்ளேன். திரைக்கதை, நடிப்பு, இசை, கலை இயக்கம், விஷூவல் எபெக்ட்ஸ் போன்றவை சிறப்பாக இருக்கும்.
ராமாயணத்தின் பிரமாண்டமான காட்சிகள், உணர்வுகள், மனிதாபிமானம், காலத்தால் அழியாத ஆன்மா ஆகியவற்றை இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வார்கள்’ என்றார். பிரைம் போகஸ் ஸ்டுடி யோஸ், எட்டு முறை அகாடமி விருது பெற்ற டிஎன்இஜி, மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரைக்கு வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர்கள் ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
