சென்னை: ‘ஜமா’ இயக்குனர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வரும் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம், சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் காதல் கதையாக உருவாகியுள்ளது. வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலையும், குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குனரும், கதாநாயகனுமான பாரி இளவழகன், இந்தப் படத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், பெரம்பூர் மக்களும் குடும்ப ரசிகர்களும் கொண்டாடும் படமாக ‘அன்பே டயானா’ இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் மூலம் கவனம் பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ள மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவையை இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகிறது. பட விழாவில் இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி கலந்துகொண்டனர்.
