வாங்கும் சம்பளத்தை தந்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் கொடுத்துவிட்டு, தனது செலவுக்கு கூட பணம் கேட்காத பவிஷ் நாராயணன், காதலி நாக துர்காவின் ஆடம்பர செலவுகளால் பெரும் கடனாளியாகி அவஸ்தைப்படுகிறார். திடீரென ஒரு நாள் நாக துர்காவுக்கு ஒரு விசித்திர கண்டிஷன் போடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் இருந்து நடிப்பில் ஒரு படி முன்னேறியுள்ள பவிஷ் நாராயணன், ஆங்காங்கே தனுஷின் சாயல் தெரிவதை மாற்றிக்கொள்வது நல்லது. நடனம் மற்றும் சண்டையில் அசத்தியுள்ளார்.
தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா காதலனை விரட்டும்போதும், பிறகு காதலனுக்காக மாறும்போதும் நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். ஹீரோ தந்தை கே.எஸ்.ரவிகுமார், போலீஸ் அதிகாரி செல்வராகவன், ஹீரோயின் தாய் ரம்யா ராமகிருஷ்ணா, வனிதா விஜயகுமார் மற்றும் சவுந்தர்யா, அஸ்வத், ஆதித்யா கதிர் இயல்பாக நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா கலர்ஃபுல் ஒளிப்பதிவு கவனத்தை ஈர்க்கிறது.
பாக்ஸன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அளவாக இருக்கிறது. எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் சுவாரஸ்யமாக தொகுத்துள்ளார். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இளம் தலைமுறையினரின் காதல், கடனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அழுத்தமாக சொல்லியிருக்கிறார். காதலில் வழக்கமான மோதலை தவிர்த்துவிட்டு புதுமையாக யோசித்திருக்கலாம்.
