மும்பை: மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், டி.வி நடிகர் ரோஹித் சாந்தல் (29) என்பவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று சொல்லப்படும் நிலையில், சிறுமியின் செல்போன் நம்பருக்கு பல்வேறு எண்களில் இருந்து தொடர்புகொண்ட ரோஹித் சாந்தல், தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் அளித்த ஒரு புகாரில், ‘ரோஹித் சாந்தல் எனது செல்போன் நம்பருக்கு தொடர்ந்து தொடர்புகொண்டு, பல்வேறு நம்பர்களில் இருந்து தொல்லை கொடுத்தார். கடந்த 5ம் தேதி எனது வீட்டுக்கு அருகில் பின்தொடர்ந்து வந்து, தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமின்றி, என்மீது பயங்கர தாக்குதலும் நடத்தினார்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ரோஹித் சாந்தல் மீது போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தகிசர் பகுதியிலுள்ள வீட்டில் இருந்த அவரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பிறகு அவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
