மும்பை: தென்னிந்திய படவுலகை தொடர்ந்து பாலிவுட்டிலும் நடித்து வருபவர், மாதவன். தவிர திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியில் அவர் நடித்த ‘துரந்தர்’ என்ற படத்தின் 2 பாகங்களும் வெற்றிபெற்று, வசூலிலும் மகத்தான சாதனை படைத்தன. இந்நிலையில் மாதவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:
குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து, இந்த உலகின் யதார்த்தத்தை முன்கூட்டியே புரிய வைப்பதுதான் சிறந்தது. என் மகன் வேதாந்துக்கு சிறுவயதிலேயே ஒரு முதிர்ந்த நபரை போல் மதிப்பளித்து வளர்த்தேன். பெற்றோர்கள் பேச தயங்கும் பாலியல் ரீதியான தொடுதல், பாலியல் பாதுகாப்பு, கருத்தடை போன்ற விஷயங்களை பற்றி, வேதாந்தின் 4 வயதில் இருந்தே வெளிப்படையாக பேசி வருகிறேன். இது அவருக்கும், எனக்குமான நம்பிக்கையை அதிகரித்தது. வெளிப்படையான இந்த அணுகுமுறை அவருக்கு என்மீது அதிக மரியாதையை ஏற்படுத்தியது. அதோடு, அவரை ஒரு பொறுப்புள்ள இளைஞனாக மாற்றவும் உதவியது.
நடிகரின் வாரிசாக இருப்பதால் ஏற்படும் தேவையற்ற செல்வாக்குகள், புகழின் இருண்ட பக்கங்கள், பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற வாழ்வியல் பாடங்களை வேதாந்திற்கு கற்றுக்கொடுத்தேன். இதன் மூலம் வெளியுலக அழுத்தங்களை அவர் எளிதாக கையாள முடியும் என்று நம்பினேன். நான் தேசிய விருது பெற்ற நடிகர் என்ற பிம்பம் வேதாந்தை ஒருபோதும் பாதித்தது இல்லை. நான் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்ற படத்தை பார்த்த வேதாந்த், என்னை பற்றி ‘Not bad dad’ (மோசம் இல்லை அப்பா) என்று சொன்னார். என் மகனை அவ்வளவு எளிதில் ஈர்க்க முடியாது. நான் நடித்ததில் அவருக்கு மிகவும் பிடித்த படம், ‘யாவரும் நலம்’.
