மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில், பல வருட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனும், இந்தி நடிகை ரேகாவும் சந்தித்தனர். விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘ஜெமினி கணேசனிடம் இருந்துதான் ‘டை’ கட்ட கற்றுக்கொண்டேன்’ என்றபோது ரேகா கண்கலங்கினார். தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ‘ரேகாவுக்கு ஒரு கோரிக்கை. உங்களை நான் ‘அபு’ என்று அன்புடன் அழைக்க அனுமதிக்க வேண்டும்.
மறைந்த எனது தந்தையையும், இப்போது எனது மகள் ஸ்ருதியையும் ‘அபு’ என்றுதான் அழைப்பேன். குழந்தையில் எனது செல்லப்பெயரும் அதுதான். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். இந்த விருதை உங்களுக்கு வழங்கியபோது ஜெமினி கணேசன் நினைவுக்கு வந்தார். எனக்கு வார்த்தைகளே வரவில்லை.
நான் கற்பனை செய்ததை விட நீங்கள் அதிகமாக சாதித்துள்ளீர்கள்’ என்றார். அவருக்கு பதிலளித்து பேசிய ரேகா, ‘இதற்காகத்தான் 50 ஆண்டுகளாக காத்திருந்தேன், கமல்ஜி. என்னை பற்றி நீங்கள் சொன்ன அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி. ஒரு நடிகராக உங்களை பற்றி நான் என்ன சொல்வது? நீங்கள் ஒரு சகலகலா வல்லவன். உங்களுக்கு எப்போதுமே மொழிகளோ, எல்லைகளோ கிடையாது’ என்றார்.
