ஊட்டி : இதமான காலநிலை நிலவிய நிலையில் நேற்று பைக்காரா மற்றும் சூட்டிங் மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள பூங்காக்கள்,படகு இல்லங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள அவலாஞ்சி,பைக்காரா,தொட்டபெட்டா சுற்றுலா தலங்களை காண ஆர்வம் காட்டுவார்கள்.
கோடை சீசனுக்கு பின் வார நாட்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்ததுள்ளது.அதே சமயம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கணிசமான அளவு வந்த நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.அதற்கேற்ப ஊட்டியில் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை அனுபவித்த படியே சுற்றி பார்த்தனர்.
நகருக்கு வெளியே பலத்த காற்றுடன் லேசான தூரல் காணப்பட்ட நிலையில் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக இயற்கை எழில் சூழ்ந்த புல்வெளி பகுதியான சூட்டிங்மட்டம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
