ஊட்டி,ஆக.3: ஊட்டி ஜேஎஸ்எஸ்., பார்மஸி கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. கல்லூரியின் முதல்வர் தனபால் வரவேற்றார். ஜேஎஸ்எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதீந்திர பட் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட எஸ்பி., பிருந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், கல்வி மட்டுமல்ல, நேர்மை, ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் அடிப்படை மதிப்புகளாக இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ளவும், வளரவும், சமூகத்திற்கு சேவை செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்துங்கள்.
கல்லூரி வாழ்க்கை என்பது நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளவும், தலைமைத்துவப் பண்புகளை உருவாக்கிக் கொள்ளவும், எதிர்கால வாழ்க்கைக்குத் தயாராகவும் கிடைக்கும் அரிய காலமாகும்.உங்கள் இலக்கில் உறுதியாக இருங்கள். ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் மதியுங்கள். நேர்மை, ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்தை எப்போதும் கடைப்பிடியுங்கள். உங்கள் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். ஒவ்வொரு சவாலும் உங்களை மேலும் வலிமையாக்கும் வாய்ப்பாகும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழையுங்கள். கற்றலை ஒருபோதும் நிறுத்தாதீர்கள், என்றார்.
விழாவில் ேஜஎஸ்எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, மொரீஷியஸ் சுகாதார அறிவியல் பீடத் தலைவர் மற்றும் மருந்தியல் பள்ளி டீன் ஆஷிஷ் வாத்வானி, உதவி பேராசிரியர் கயாதி மௌத்கில் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 200 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
