ராசிபுரம், ஜூலை 31: தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயத்தை ஆடி மாதத்தில் தொடங்குவது இயற்கையின் சீர்நிலைகளுடன் இணைத்து நல்ல விளைச்சலை தருகிறது. ஆடி மாதத்தில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், விதைகள் எளிதில் முளைத்து செழிக்கும். காய்கறி விதைகள் விதைப்புக்கு ஏற்ற மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. தற்போது தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி விதை தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விதை தொகுப்பில் வெண்டை, தக்காளி, முருங்கை, சுரைக்காய், கத்தரி, பீர்க்கன், புடலை, கீரை ஆகிய 8 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு, முழுவிலையில் (ரூ.80/தொகுப்பு) அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் பயனாளிகள் முழுதொகுப்பாகவும் அல்லது தனித்தனி விதை பொட்டலங்களாகவும் பெற்றுக்கொள்ளலாம். இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைவரும் பெற்று பயனடையலாம். அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விதைகளை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
