நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு: பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரி ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூலை 28: தொண்டப்பாடி, பாலையூர், வேப்பந்தட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பயிர்கடன்களை தவெக அரசு தள்ளுபடி செய்யக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையில் நேற்று காலை 11 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி, வேப்பந் தட்டை, பாலையூர் பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன்சங்க சொசைட்டிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் தொண்டபடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூர் மாரியம்மன் கோயிலிலிருந்து பேரணியாக சென்று கோஷமிட்டு, பாலையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் செல்லப்பிள்ளை என்பவரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூரா. விசுவநாதன் தலைமையில் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு கீழுள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழு பயிர்க் கடனும், 5 ஏக்கருக்கு மேலுள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் செய்யப் படும் என அறிவித்துள்ள நிலையில், ரூ.75ஆயிரம் பயிர் கடன் பெற்றுள்ளவர்களுக்கு ரூ.75ஆயிரம் பயிர் கடன் தள்ளுபடியும்,

ரூ.35 ஆயிரம் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடியும் என அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் போராட்ட குணத்தை ஏற்படுத்தி, தேர்தல் அறிக்கையிலும், தனது வாக்குறுதிப்படியும், 17 நிபந்தங்களை கைவிட்டு, கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கியில், விவசாயிகள் வாங்கிய முழு பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டைமேற்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியதலைவர் அங்கமுத்து, ஒன்றிய துணைத் தலைவர் செல்வராஜ், வாலிகண்டபுரம் கிளை தலைவர் முருகேசன், பாளையூர் கிளை தலைவர் சின்னத்துரை, துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சங்க விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: