ஈரோடு : ஈரோட்டில் மாம்பழம் விலை வீழ்ச்சியடைந்தும், அதனை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர். ஈரோடு வ.உ.சி பூங்காவிலுள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தையில், தற்போது அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், கிரேப் செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவு மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களை வெளி மாநிலங்களில் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள் குறைந்துள்ளது. இதனால், மாம்பழங்களின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள், ஈரோடு வ.உ.சி பூங்காவிலுள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைக்கு விவசாயிகள் அதிகளவில் கொண்டு வந்தனர். ஆனால், மாம்பழங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், மார்க்கெட்டிக்கு வெளியே இருக்கும் குப்பையில் மாம்பழங்களை கொட்டி செல்கின்றனர்.
