×

சாத்தான்குளத்தில் வயல்வெளியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

*விவசாயிகள் புகார்

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஏராளமான விவசாயிகள் வாழை, கடலை மற்றும் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு விவசாயம் பார்த்து வருகின்றனர். இங்கு ஒரு பகுதியில் இரு மின்கம்பத்தில் இருந்து வரும் மின் கம்பிகள், வயல்வெளியில் மிகவும் தாழ்வாக செல்கின்றன.

இவ்வாறு தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், வாழை இலைகளில் உரசியபடி காணப்படுகிறது. வயல்வெளிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாய வேலைகளில் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் வாழை இலை மற்றும் தார்களை பறிக்க செல்லும்போது அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் பகுதிகளில் உழவுப் பணிகளை மேற்கொள்ளவும் சிரமம் உள்ளதாகவும், விபத்து அபாயம் நிலவுவதாகவும் குறிப்பிட்டனர்.இதுகுறித்து சாத்தான்குளம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

எனவே விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கூடுதலாக ஒரு மின்கம்பத்தை நட்டு தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இப்பகுதியை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sathankulam ,Pallivasal Pattu ,Nazareth ,
× RELATED திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில்...