ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

 

பெரம்பூர், ஜூலை 27: சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் போலீசாரை பார்த்ததும் ஓட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பிடிபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் (28) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜஸ்விந்த் (22) என்பது தெரிய வந்தது. மேலும் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் ஒடிசாவில் உள்ள தனது நண்பர் சீனி என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வர சொல்லி உள்ளார்.

அதன்படி திலீப் குமார் மற்றும் ஜஸ்விந்த் இருவரும் ஓடிசாவுக்கு சென்று 12 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கொடுத்துள்ளனர். அதேபோன்று இம்முறையும் சசிகுமார் ஒடிசாவில் உள்ள தனது நண்பர் சீனிக்கு ரூ.60 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்பி நிலையில், திலீப் குமார் மற்றும் ஜஸ்வந்த்தை கடந்த 23ம் தேதி ரயில் மூலம் ஒடிசாவுக்கு சென்று சீனியை சந்தித்து கஞ்சாவை வாங்கி நேற்று காலை ரயிலில் வந்துள்ளனர். ரயில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் மெதுவாக செல்லும்போது கீழே இறங்கி ஆட்டோ மூலம் பட்டாபிராம் செல்ல முயற்சி செய்தபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சசிக்குமார் உள்ளிட்டோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: