நாகர்கோவில்: சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி சபரிவர்மன் (34) என்பவர், தனது கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக தென்தாமரைகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு குழுவினர் 2 நாட்களாக சிறையில் நடத்தி வந்த விசாரணை நேற்று முன்தினம் மாலையில் நிறைவு பெற்றது. சபரிவர்மன் அடைக்கப்பட்டு இருந்த அறையில் அவருடன் இருந்த கைதிகளிடம் விசாரணை நடத்தினர். 25 கைதிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் சிறையில் சபரிவர்மன் கை, கால்கள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்த அறையையும் ஆய்வு செய்துள்ளனர். சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவையும் பெற்றுள்ளனர்.
அன்றைய தினம் சிறையில் இருந்த சிறை காவலர்கள் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணை நடக்கும் என சிபிசிஐடி போலீசார் கூறி உள்ளனர். சிபிசிஐடி உயர் போலீஸ் அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் நாகர்கோவில் வர உள்ளனர். அவர்கள் சம்பவ இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
