போடி: தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன்கள் சபரீசன் (13), ஹரிஷ் (12) ஆகியோர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்தனர். சநேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தனர். பின்னர் வெளியே சென்று விளையாடிய இருவரும், திடீரென்று மாயமாகினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ரங்கநாதபுரத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில், கரட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் உள்ள சுமார் 100 அடி ஆழ கிணற்றில் நேற்று இரவு அண்ணன், தம்பி இருவரும் பிணமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை யாரும் அழைத்து வந்து கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா என்பது குறித்து போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
