கோவை, ஜூலை 24: குனியமுத்தூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை குனியமுத்தூர் போக்குவரத்து போலீசார் சார்பில் குளத்துப்பாளையம் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து எஸ்ஐ அன்பழகன் தலைமை தாங்கி மாணவர்களுக்குச் சாலைப் பாதுகாப்பைத் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும், சாலை விதிகளை தவறாமல் பின்பற்றுவோம், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிவோம், பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவோம், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவோம், வாகனம் ஓட்டும்போது செல்போன் தவிர்க்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் சிறப்பு எஸ்ஐ ரமேஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
