சேத்துப்பட்டு, ஜூலை 21: செங்கம் அருகே இரவு போதையில் வீடு புகுந்து 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 26 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால், வீட்டில் தனியாக வசித்து கூலிவேலைகள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு மூதாட்டி வழக்கம்போல் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது காற்று வசதிக்காக கதவை திறந்து வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் மதுபோதையில் வீடு புகுந்த வாலிபர் ஒருவர் மூதாட்டி வாயை கையால் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் தப்பி ஓடிய நிலையில், மூதாட்டி அருகிலுள்ள தங்கை வீட்டிற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூதாட்டி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் மூதாட்டியை பலாத்காரம் செய்தது, அருகில் உள்ள கரிப்போர் கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான பசுபதி(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பசுபதியை நேற்று முன்தினம் கைது செய்து, போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பசுபதிக்கு இன்னும் திருமணமாகவில்லை.
