கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கோவையில் அளித்த பேட்டி: தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தனியார் மற்றும் பல அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் சட்டவிரோதமாகத் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலப் பரிமாற்றத்திற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை மூடுமந்திரமாகவே வைத்துள்ளனர். இதில் முழுமையான உண்மை வெளிவர சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, கோயில் நிலங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.
