வடலூர், ஜூலை 16: பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்தவர் காதர் மொய்தீன் மகன் முகமது ஹனிப் (21). இவர் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று காலை சுமார் 11 மணியளவில், வடலூர் ரயில் நிலையத்துக்கும், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையத்துக்கும் இடையில் எல்.சி. கேட்-34 அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் மோதி படுகாயமடைந்தார். பாதங்கள் இரண்டும் துண்டான நிலையில் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலூர் ரயில்வே உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார், அவரது உடலை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது தாயார் தாஹிரா பேகம் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
