பவானி: ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, கடந்த மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, இதே பகுதியில் உள்ள மண் தொழிலாளர் 2வது வீதியை சேர்ந்த ஹரிக்குமார் (22), கிரி (23) ஆகியோர் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருட முயன்றனர். இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டார். குடிபோதையில் இருந்த வாலிபர்கள் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதோடு பாலியல் பலாத்காரம் செய்தனர். படுகாயம் அடைந்த மூதாட்டி, பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவியின் உதவியுடன் ஹரிக்குமார், கிரி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையிலிருந்த ஹரிக்குமார், கிரி ஆகியோர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம் 1982 கீழ் பாலியல் குற்றவாளிகள் எனக் கருதி தடுப்பு காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தொடர்ந்து பொது ஒழுங்கு மற்றும் அமைதிக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டாசில் கைது செய்யுமாறு எஸ்பி பரிந்துரையின் பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரையும், பவானி இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தார்.
