புதுடெல்லி: நாட்டில் டிஜிட்டல் தடயவியல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்யும் 5 புதிய மையங்களுக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் விரைவான நீதி வழங்கும் நோக்கில், தடயவியல் வசதிகளை விரிவுபடுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது 5 புதிய மின்னணு ஆதார ஆய்வு மையங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதில், எல்லை பாதுகாப்புப் படையின் சிறப்பு கருவிகள் பிரிவு, டிரோன் தொடர்பான மின்னணு ஆதாரங்களை ஆய்வு செய்யும் டிரோன் தடயவியல் பணிகளை மேற்கொள்ளும்.
மும்பை, கோவா, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் கணினி மற்றும் மொபைல் சாதனங்களின் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்யும். ஜெய்ப்பூரில் உள்ள மாநில தடயவியல் ஆய்வகத்தின் சைபர் பிரிவு கணினி சார்ந்த மின்னணு ஆதாரங்களை பரிசோதிக்கும். இந்த ஆய்வகங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 79ஏ-ன் கீழ் அதிகாரப்பூர்வ மின்னணு ஆதார ஆய்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
